இருளில் மூழ்கும் முதுகுளத்துார் பஸ் ஸ்டாண்ட்: பயணிகள் அவதி
முதுகுளத்துார்: முதுகுளத்துார் பஸ் ஸ்டாண்டில் இரவில் மின்விளக்கு எரியாததால் இருளில் மூழ்கும் நிலையால் மக்கள் சிரமப்படுகின்றனர். முதுகுளத்துாரில் இருந்து சென்னை, கோவை, திருப்பூர், மதுரை, ராமேஸ்வரம், அருப்புக்கோட்டை, கும்பகோணம், தஞ்சாவூர், விருதுநகர், திருச்செந்துார், திருநெல்வேலி, சிதம்பரம் உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு 50க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினந்தோறும் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் பஸ்களில் பயணிக்கின்றனர். பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு மின்விளக்கு அமைக்கப்பட்டது. தற்போது முறையாக பராமரிக்கப்படாததால் மின்விளக்கு எரிவதில்லை. இதனால் இரவு நேரத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் இருளில் காத்திருக்கின்றனர். ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் அச்சத்தில் இரவில் செல்லும் பயணிகள் ஒருவரின் உதவியுடனே பஸ் ஸ்டாண்டில் காத்திருக்கின்றனர். கடைகளில் எரியும் வெளிச்சத்தில் காத்திருக்கும் பயணிகள் கடை அடைக்கப்பட்ட பிறகு முழுவதும் இருளில் தவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முதுகுளத்துார் பஸ் ஸ்டாண்டில் மின்விளக்கு எரிவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.