பரமக்குடியில் ஓராண்டுக்கு பின் புதிய கிளை நுாலகம் திறப்பு; தினமலர் நாளிதழுக்கு நன்றி தெரிவித்த வாசகர்கள்
பரமக்குடி,: பரமக்குடியில் ராமநாதபுரம் மாவட்ட அரசு கிளை நுாலக புதிய கட்டடம் நேற்று திறக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழுக்கு வாசகர்கள் நன்றி தெரிவித்தனர்.பரமக்குடியில் 1954 முதல் இரண்டாம் நிலை அரசு நுாலகம் இயங்கி வருகிறது. பெருமாள் கோயில் தெருவில் தனியார் வாடகை கட்டடத்தில் இருந்த நுாலகம் சேதமடைந்ததால் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்கு மாற்றப்பட்டது.இந்நிலையில் 2022 ஏப்.,ல் ராமநாதபுரம் ரோட்டில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் கட்ட அனுமதிக்கப்பட்டது. 2023ல் பணிகள் துவங்கி 2024 முடிக்கப்பட்டது. ரூ.70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கட்டடம் ஓராண்டாக திறக்கப்படாமல் இருந்தது.நுாலகம் நிலை குறித்து தினமலர் நாளிதழ் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்துள்ளது. இந்நிலையில் நுகர்வோர் அமைப்பு, மக்கள் நுாலகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் நுாலகம் குறித்து கேள்வி எழுப்பினர். இதன்படி நேற்று சென்னையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக நுாலகத்தை திறந்து வைத்தார்.பரமக்குடியில் சப்-கலெக்டர் அபிலாஷா கவுர், எம்.எல்.ஏ., முருகேசன், நகராட்சி தலைவர் சேது கருணாநிதி, துணைத்தலைவர் குணா, கவுன்சிலர் கிருஷ்ணவேனி, நுாலகர் நித்தியானந்தம் கலந்து கொண்டனர்.
கட்டடத்தை விரிவுபடுத்த கோரிக்கை
பரமக்குடி கிளை நுாலகத்திற்கு 6150 சதுர அடியில் இடம் தேர்வு செய்யப்பட்ட நிலையில் 1050 சதுர அடியில் மட்டும் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. மேலும் சிறுவர்களுக்கான பிரிவு, கணினி வசதிகள், அரசு தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களுக்கான தனி அறை ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.ஆனால் புத்தகங்களை அடுக்கி வைப்பதற்கு போதிய வசதி செய்யப்படாமல் உள்ளது. எனவே அருகில் உள்ள இடத்திலோ அல்லது முதல் தளத்திலோ கட்டடத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.