சாயல்குடியில் பராமரிப்பின்றி சீர்மரபினர் மாணவர் விடுதி கண்டுகொள்ளாத அதிகாரிகள்
சாயல்குடி: சாயல்குடியில் சீர் மரபினர் மாணவர் விடுதி உரிய முறையில் மராமத்து பணிகள் செய்யாமல் சிதிலமடைந்து வருகிறது.சாயல்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் பிளஸ்-2 படிக்கும் மாணவர்களுக்காக சீர் மரபினர் மாணவர் விடுதியை 2004ல் ரூ.31.50 லட்சத்தில் அப்போதைய முதல்வர் ஜெ., திறந்து வைத்தார். சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 50 மாணவர்கள் தங்கி படிக்கும் சீர் மரபினர் மாணவர் விடுதியின் கட்டடங்களில் சிமென்ட் பூச்சுக்கள் உதிர்ந்தும், மழைக் காலங்களில் வளாகம் முழுவதும் தண்ணீர் தேங்கி செல்ல வழியின்றி உள்ளது.மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது: அரசு சீர்மரபினர் மாணவர் விடுதி கட்டடங்கள் எவ்வித பராமரிப்பும் இன்றி சேதமடைந்துள்ளது. இதனால் இங்கே தங்கி படிப்பதற்கு மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர். அப்பகுதியில் வீடுகளில் வளர்க்கக்கூடிய ஆடு, மாடுகள் விடுதியில் தஞ்சம் அடைகின்றன. இதனை பராமரிக்க வேண்டிய விடுதி வார்டன் முறையாக வருவதில்லை. எனவே பள்ளி மாணவர்களின் நலன் கருதி அரசு உரிய நிதி ஒதுக்கீடு செய்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும், மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.