வங்கிக்கணக்கை விலைக்கு வாங்கி ஆன்லைன் மோசடி
ராமநாதபுரம்:வடமாநிலத்தை சேர்ந்த ஆன்லைன் மோசடி கொள்ளையர்கள் புதிய யுக்தியாக ரூ.10 ஆயிரம் முதல் 15ஆயிரம் வரை கொடுத்து ஒருவரது வங்கி கணக்கை விலைக்கு வாங்கி ஆன்லைன் மோசடியில் ஈடுபடுவதால் அவர்களிடமிருந்து பணத்தை மீட்க போலீசார் சிரமப்படுகின்றனர். வங்கி அல்லது பிற நிதி நிறுவனம் போல் மோசடியாகக் காட்டிக்கொண்டு மக்களின் பணத்தாசையை பயன்படுத்தி பல லட்சத்தை வடமாநில நபர்கள் கொள்ளையடித்து வருகின்றனர். இது போன்ற சைபர் புகார்கள் அதிகரித்து வருகின்றன. பணப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ள வங்கி கணக்கு அடிப்படையில் குஜராத், மும்பை, பீஹார், ஜார்கண்ட் போன்ற இடங்களுக்கு குற்றவாளிகளை தேடி போலீசார் செல் கின்றனர். ஆனால் பாதிக்கப்பட்டவர்களை விசாரிக்கும் போது அவர்களது வங்கி கணக்கு பாஸ்புக், ஏ.டி.எம்.,கார்டு ஆகியவற்றை ரூ.10ஆயிரம் முதல் 15ஆயிரம் வரை விலைக்கு வாங்கி மர்மநபர்கள் ஆன்லைனில் மோசடியாக பண பரிவர்த்தனையில் ஈடுபடுவது தெரிய வந்துள்ளது. இதில் பணத்தை உடனடியாக மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே ஒருவங்கி கணக்கில் இருந்து மற்றொரு வங்கி கணக்கு மூலம் பணத்தை இழந்தவர்கள் உடனடியாக 1930 என்ற எண்ணிற்கு புகார் அளித்தால் அந்த வங்கி கணக்கை உடனடியாக முடக்கி பணத்தை மீட்க முடியும். இதுகுறித்து ராமநாதபுரம் எஸ்.பி., சந்தீஷ் கூறுகையில்'' தற்போது சைபர் கிரைம் புகார்கள் அதிகரித்துள்ளன. ஆன்லைன் பரிசு விழுந்துள்ளது. குறிப்பிட்ட லிங்க் அனுப்பி இதை டாஸ்க் செய்தால் பணம் தருகிறோம். அதற்கு பதிவு செய்ய வேண்டும். அடுத்து ரூ.10 லட்சம், ரூ.20 லட்சத்திற்கு மாதம் அதிக வட்டி தருவதாக ஏமாற்றுகின்றனர். இதுபோல் பரமக்குடியில்ரூ.60 லட்சம் வரை ஏமாற்றியுள்ளனர். தற்போது அலைபேசி,சிம் கார்டு மட்டுமின்றி வங்கி கணக்கை விலைக்கு வாங்கி பணத்தை எடுக்கின்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்பதில் சமீபத்தில் ஓய்வுபெற்ற வங்கி மேலாளரிடம் சி.பி.,ஐ., எனக்கூறி ஏமாற்றி 45 வங்கி கணக்குகள் மூலம் ராமேஸ்வரத்தில் ரூ.97 லட்சம் பறித்துள்ளனர். எனவே மக்கள் உஷராக இருக்க வேண்டும் என்றார்.