பரமக்குடியில் கைதி உயிரிழப்பு வழக்கு ஜூன் 2க்கு தள்ளிவைப்பு
ராமநாதபுரம்: பரமக்குடி போலீஸ் ஸ்டேஷனில் கைதி உயிரிழந்தவழக்கில் மாவட்ட முதன்மை நீதிமன்றம் ஜூன் 2க்கு விசாரணையை தள்ளி வைத்து உத்தரவிட்டது.மதுரையை சேர்ந்த ராமானுஜன் மகன் வெங்கடேசன் 26. இவர் திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு2012 அக்.,2-ல் பரமக்குடி எமனேஸ்வரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வரப்பட்டவர் இறந்தார்.போலீசார் தாக்கியதில் இறந்ததாக உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.வழக்குப்பதிவு செய்யப்பட்டு அப்போதைய எஸ்.ஐ., முனியசாமி உட்பட 4 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டது. ஓய்வு பெற்ற எஸ்.ஐ., முனியசாமி ஜாமினில் வந்த பின் உடல் நலக்குறைவால் இறந்தார்.இந்த வழக்கில் ஏட்டு பரமக்குடி ஞானசேகரன், மஞ்சூர் கிருஷ்ணவேல், ஆப்பநாடு கோதண்டராமன் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு மாவட்ட முதன்மை நீதிபதி மெகபூப் அலிகான் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.இதில் கோதண்ட ராமன், கிருஷ்ணவேல் ஆகியோர் ஆஜராகினர். ஞானசேகரன் ஆஜராகவில்லை. மீண்டும் விரசாரணைக்காக நீதிபதி மெகபூப் அலிகான் வழக்கு விசாரணையை ஜூன் 2க்கு தள்ளி வைத்தார்.