இலவச கல்வி சேவைக்கான ஆன்லைன் வேலை செய்யாததால் பெற்றோர் அவதி
கீழக்கரை: அனைவரும் கல்வி பெறவேண்டும் என்ற நோக்கத்தில் 2009ம் ஆண்டு கல்வி உரிமைச் சட்டம் (ஆர்.டி.இ.,)இயற்றப்பட்டது. அதன் அடிப்படையில் ஏழை எளிய மக்களுக்கும் தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இலவச கல்வி பெற 2018ம் ஆண்டு முதல் மாணவர்கள் திட்டத்தின் அடிப்படையில் இலவச கல்வி பெற்று வருகின்றனர்.ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு தாங்கள் விரும்பும் தனியார் பள்ளிகளில் இத்திட்டத்தின் அடிப்படையில் கல்வி பயிலும் போது சிரமம் குறைந்து பெரும் வரவேற்பை பெற்றது. 2025ல் நடப்பு கல்வி ஆண்டிற்கான சேர்க்கை பெற ஆன்லைன் மூலம் மனு செய்யலாம் என்றும் அதற்கான ஆரம்ப தேதி ஏப்., 22 முதல் மே., 20 வரை கடைசி தேதியாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது: இத்திட்டத்தின் அடிப்படையில் 25 சதவீதம் பேர் இலவச கல்வியை பெறும் நோக்கில் பெற்றோர் சம்பந்தப்பட்ட இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கும் போது வெப்சைட் செயல்பாடின்றி உள்ளதாக தகவல் வருகிறது.ஆன்லைன் மூலம் மனு செய்ய தனியார் இ-சேவை மையங்களுக்கு அதிகளவு பெற்றோர் அலைந்து திரிகின்றனர். எனவே தமிழக கல்வித்துறையினர் இத்திட்டத்தின் நோக்கத்தை செயல்படுத்த அதற்குரிய வெப்சைட்டை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.