கமுதியில் டாக்டர்கள் பற்றாக்குறை நோயாளிகள் காத்திருந்து அவதி
கமுதி: கமுதி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் பல மணி நேரம் காத்திருந்து அவதிப்படும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.கமுதி அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகள், வெளிநோயாளிகள், சித்த மருத்துவம், மகப்பேறு, எக்ஸ்ரே உட்பட தனித்தனி பிரிவுகளாக செயல்படுகிறது. கமுதி அதனை சுற்றியுள்ள கோவிலாங்குளம், பசும்பொன், கோட்டைமேடு, புதுக்கோட்டை உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினந்தோறும் 200க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர்.கமுதி தாலுகாவில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக கமுதி அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளை அனுப்புகின்றனர். கமுதி வட்டாரத்தில் பல்வேறு கிராமங்களில் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் தினந்தோறும் தனியார், அரசு மருத்துவமனையில் வழக்கத்தைவிட அதிகமானோர் சிகிச்சை பெறுகின்றனர்.இங்கு டாக்டர்கள் பற்றாக்குறையால் தினந்தோறும் நோயாளிகள் காத்திருந்து சிகிச்சை பெறும் அவல நிலை உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூ.,மாவட்டக் குழு உறுப்பினர் முத்துவிஜயன் கூறியதாவது:கமுதி வட்டாரத்திற்க்கு உட்பட்ட கிராமங்களில் இருந்து 200க்கும் மேற்பட்டோர் தினந்தோறும் இங்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர். கமுதியை தலைமையிடமாக கொண்டு தலைமை அரசு மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இங்கு போதுமான அடிப்படை வசதிகள், டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் சிரமப்படுகின்றனர்.தண்ணீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளும் இல்லாமல் நோயாளிகள் தவிக்கின்றனர். தற்போது டாக்டர்கள் பற்றாக்குறையால் தினந்தோறும் வரும் நோயாளிகள் பல மணி நேரம் காத்திருந்து சிகிச்சை பெறும் நிலை உள்ளது. சிலர் டாக்டர்கள் பார்க்காமலே செல்கின்றனர்.இதனால் தனியார் மருத்துவமனைக்கு செல்லும் அவலநிலை உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மாவட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து கமுதி அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் மற்றும் டாக்டர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.கமுதி அரசு மருத்துவமனையை கண்டித்து ஜனவரி மாதம் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.