உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரத்தில் விடிய விடிய பெய்த மழையால் மக்கள் பாதிப்பு

ராமநாதபுரத்தில் விடிய விடிய பெய்த மழையால் மக்கள் பாதிப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மாலை வரை விடாது பெய்த அடை மழையால் வடிகால் வசதிகளே இல்லாத ராமநாதபுரம் நகரில் மழைநீர் ரோடு, தெருக்களில் குளம்போல தேங்கியதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமப்பட்டனர்.ராமநாதபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் வடகிழக்கு பருவமழை மாவட்ட முழுவதும் பரவலாக பெய்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மாலை வரை மாவட்டம் முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்தது.அதிகபட்சமாக ராமநாதபுரத்தில் நேற்று காலை 8:00 மணி வரை 99 மி.மீ., வாலிநோக்கம் 73 மி.மீ., பரமக்குடி 77 மி.மீ., மழை பெய்தது. இதன் காரணமாக ராமநாதபுரம் நகர், சக்கரக்கோட்டை, பட்டணம்காத்தான் ஊராட்சியில் மழை நீர் வடிகால்கள் பராமரிக்கப்படாமல் உள்ளதால் குளம் போல ரோடுகள், தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் தேங்கியது. குறிப்பாக பழைய பஸ் ஸ்டாண்டில் மழைநீர் தேங்கியதால் பயணிகள் சிரமப்பட்டனர். அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகம், ஓம் சக்திநகர், பாரதிநகர், மதுரை- ராமேஸ்வரம் ரோட்டில் தண்ணீர் குளம் போல தேங்கியதால் வாகன ஓட்டிகள், மக்கள் சிரமப்பட்டனர். மழை நீரை ஊருணிகளுக்கு கொண்டு செல்லும் வகையில் வரத்து கால்வாய்களை சீரமைக்க நகராட்சி, ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை