காஞ்சிரங்குடியில் எருதுகட்டு விழா நடத்த மக்கள் கோரிக்கை
ராமநாதபுரம்: கீழக்கரை தாலுகா மேலவலசை பொன்னும் சிறை எடுத்த அய்யனார் கோயில் விழாவில் எருதுகட்டு நடத்த கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர்.காஞ்சிரங்குடி ஊராட்சி மேலவலசை கிராமத் தலைவர் செல்வகுமார் தலைமையில் மக்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.ஊரில் தேர்தல் நடத்தி நிர்வாகிகளை தேர்வு செய்கிறோம். 200 ஆண்டுகளாக பொன்னும் சிறை எடுத்த அய்யனார் கோயில் விழாவில் எருதுகட்டு நடக்கிறது.இவ்வாண்டு சிலர் விழாவை நடத்தவிடாமல் பிரச்னை செய்கின்றனர். இது தொடர்பாக போலீசார், தாசில்தாரிடம் புகார் அளித்துள்ளோம். இவ்விஷயத்தில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலையிட்டு பாரம்பரிய எருதுகட்டு விழா நடத்தவும், உரிய பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.