இலவச மனை பட்டா கோரி மாற்றுத்திறனாளிகள் மனு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் பட்டா வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் மனு கொடுத்தனர். தமிழ்நாடு அனைத்து வகைமாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமமைகளுக்கான சங்கமாவட்ட செயலாளர் ராஜ்குமார் கூறியதாவது: தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படும் என அறிவித்தது. ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் நுாற்றுகணக்கான மாற்றுத்திறனாளிகள் இத்திட்டத்தில் விடுபட்டுள்ளனர். அவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு மேல் பட்டா வழங்கப்படாமல் உள்ளது. பெரும்பாலானோர் குடிசை வீட்டில் வாழ்ந்து வருகிறோம். அதுபோல் மாற்றுத்திறனாளிகள் சிலருக்கு இருசக்கர வாகனம் வழங்கவில்லை. நுாறு நாள் வேலை திட்டத்திற்கும் உரிய நிதி வழங்காததால் மாற்றுத்திறனாளிகள் பலர் வாழ்வாதாரம் இழந்துள்ளனர் என்றார். தொடர்ந்து கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் மாற்றுத் திறனாளிகள் மனு கொடுத்தனர். அப்போது, 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் மனு கொடுக்குமாறு கலெக்டர் அறிவுறுத்தினார். அதற்குநீண்ட காலமாக குடிசை வீட்டில் வசித்து வருகிறோம். பட்டா வழங்க கோரி பல்வேறு அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் பலனில்லை என மாற்றுத்திறனாளிகள் பதில் அளித்தனர். விரைவில் தீர்வு காண்பதாக கலெக்டர் உறுதி அளித்த பின் அனைவரும் கலைந்து சென்றனர்.