ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கப்பணி இழுத்தடிப்பு: பழைய பஸ்ஸ்டாண்டில் வசதியின்றி பயணிகள் அவதி
ராமநாதபுரம் நகராட்சி புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து மதுரை, துாத்துக்குடி, கும்பகோணம், புதுக்கோட்டை ஆகிய வெளி மாவட்டங்கள், உள்ளூர்களுக்கு 300க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டன. கட்டடம் பழுது, போதிய இடவசதியின்மை காரணமாக 2023 ஆக.,3 ல் ரூ.20 கோடியில் புதிய பஸ் ஸ்டாண்ட் 16,909 ச.அடியில் விரிவாக்க கட்டுமானப் பணிகள் துவங்கியது.அப்போது பழைய பஸ் ஸ்டாண்ட் மற்றும் மூலக்கொத்தளம் வீட்டுவசதி வாரிய இடத்தில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்க முடிவு செய்தனர். ஆனால் வீட்டுவசதி வாரியம் இடம் தராததால் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்தே 300க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன.இங்கு இட நெருக்கடியால் கடைகளும் பெயரளவில் மட்டுமே உள்ளன. குடிநீர், கழிப்பறை போதுமான அளவில் இல்லை. பஸ்கள் உள்ளே செல்லும் போதும், வெளிய வரும் போதும் ரயில்வே பீடர் ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக பள்ளி, கல்லுாரி, அலுவலகம் நேரங்களில் பயணிகள் பஸ் ஏறி, இறங்க சிரமப்படுகின்றனர். எனவே ஆமை வேகத்தில் நடைபெறும் புதிய பஸ் ஸ்டாண்ட் பணிகளை விரைவில் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதுகுறித்து நகராட்சி கமிஷனர் அஜிதா பர்வின் கூறுகையில், புதிய பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கப் பணியில் கட்டுமானப் பணிகள் 90 சதவீதம் முடிந்துள்ளது. பிப்.,ல் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு புதிய பஸ் ஸ்டாண்டை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.