ராமேஸ்வரம் மீனவர்கள் 10 நாட்களுக்கு பின் மீன்பிடிப்பு
ராமேஸ்வரம்: -10 நாட்களுக்குப் பின் மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படை தாக்குதல் இன்றி நிம்மதியுடன் கரை திரும்பினர்.இலங்கை கடற்படை சிறைபிடித்த மீனவர்களை விடுவிக்க கோரி அக்., 2 முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்த நிலையில், அக்., 12ல் ஸ்டிரைக்கை வாபஸ் பெற்று மீன்பிடிக்க சென்றனர். மீன்பிடி தடை காலத்திற்கு பின் ஜூன் 15 முதல் மீன்பிடிக்கச் சென்ற இம்மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கி கைது செய்து சிறையில் அடைத்து சித்ரவதை செய்வதும், படகுகளை மூழ்கடிப்பது தொடர்கதையாக இருந்தது.இதனால் வாழ்வாதாரம் இழந்த மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாமல் அச்சத்தில் இருந்தனர். இச்சூழலில் 10 நாட்களுக்கு பின் படகுகளில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள், இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்து, இலங்கை கடற்படையின் தாக்குதல் இன்றி நிம்மதி மூச்சுடன் நேற்று காலை ராமேஸ்வரம் கரை திரும்பினர். எதிர்பார்த்த மீன்வரத்து கிடைக்காவிட்டாலும் நஷ்டம் ஏற்படவில்லை என தெரிவித்தனர்.