சேதமடைந்த கட்டடத்தில் ரேஷன் கடை: மக்கள் அச்சம்
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே புளியங்குடி கிராமத்தில் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள கட்டடத்தில் செயல்பட்டு வரும் ரேஷன் கடையால் மக்கள் அச்சமடைகின்றனர்.முதுகுளத்துார் அருகே புளியங்குடி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரேஷன் கடைக்கு கட்டடம் வசதி இல்லாததால் மக்கள் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து 2 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஊராட்சி கட்டடத்தில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. தற்போது கட்டடம் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இங்கு அத்தியாவசியப்பொருட்கள் வாங்க வரும் மக்கள் மற்றும் பணியாளர்கள் ஒருவித அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டடம் என்பதால் ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் உள்ளது. அதிகாரிகள் புளியங்குடி கிராமத்தில் ஆய்வு செய்து தற்காலிகமாக வேறு கட்டடத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும்.மேலும் நிரந்தரமாக புதிய கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.