நரிப்பையூரில் சேதமடைந்த நிலையில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி புதிய சாலை அமைக்க கோரிக்கை
சாயல்குடி: சாயல்குடி அருகே நரிப்பையூரில் சேதமடைந்த நிலையில் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டியில் தண்ணீர் வினியோகம் செய்கின்றனர். புதிதாக தொட்டி அமைக்க வேண்டும். நரிப்பையூரில் 1999ல் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் 3 லட்சம் லி., கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. தற்போது வரை அவற்றில் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மேல்நிலைத் தொட்டியை தாங்கும் துாண்களில் சேதமடைந்தும் பக்கவாட்டு சுவரில் கான்கிரீட் பூச்சுக்கள் வெளியே தெரிகிறது.இதனால் தண்ணீர் ஏற்றினாலும் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. குடிநீர் மேல்நிலைத் தொட்டி சேதமடைந்த நிலையில் உள்ளதால் அவற்றை இடித்து விட்டு புதிதாக வேறு ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட வேண்டும். முன்பு கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட இந்த குடிநீர் தொட்டி தற்போது வரை பயன்பாட்டில் உள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து நரிப்பையூர் கடற்கரை செல்லும் சாலை ஒத்தையடி பாதையாக மாறி வருகிறது. இரு புறங்களிலும் சேதமடைந்து கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தடுமாறி கீழே விழுகின்றனர். மும்முனை சந்திப்பில் உயர் கோபுர மின் விளக்கு எரியாமல் காட்சி பொருளாக உள்ளது. எனவே குறைகளை நிவர்த்தி செய்ய கடலாடி யூனியன் தனி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.