மீனவர்களுக்கு மானிய டீசல் வழங்க கோரிக்கை
ராமேஸ்வரம்: பெஞ்சல் புயல் எதிரொலியாக ராமேஸ்வரம் மீனவர்களுக்கு நவ.,ல் வழங்க வேண்டிய மானிய டீசலில் 5.30 லட்சம் லி., இருப்பில் உள்ளது. இதனை டிச., 30க்குள் சேர்த்து வழங்கிட வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தினர்.'பெஞ்சல்' புயலால் நவ., 23 முதல் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்துறையினர் தடை விதித்தனர். நவ.,ல் 7 நாள்கள் மீன்பிடிக்கச் செல்லாமல் மீனவர்கள் வீடுகளில் முடங்கினர். இதனால் தமிழக அரசு மாதந்தோறும் ஒரு விசைப்படகிற்கு வழங்கும் 1900 லி., மானிய டீசலை முழுமையாக பெற முடியவில்லை.ராமேஸ்வரத்தில் உள்ள 650 படகில் நவ., மாத ஒதுக்கீட்டில் ஒரு படகிற்கு 600 முதல் 800 லி., வரை மானிய டீசலை அரசு பங்குகளில் பிடிக்கவில்லை. இதனால் நவ.,ல் ராமேஸ்வரம் படகிற்கு வழங்க வேண்டிய மானிய டீசலில் 5.30 லட்சம் லி., மானிய டீசல் இருப்பில் உள்ளது.ராமேஸ்வரம் மீனவர் சங்க தலைவர் சகாயம்: பெஞ்சல் புயலால் நவ.,ல் மீன்பிடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. ஆகையால் நவ., மாதத்தில் பிடிக்க முடியாத மானிய டீசலை சேர்த்து டிச., 30க்குள் வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் என்றார்.