இலங்கையில் ரூ.10 லட்சம் பீடி இலைகள் பறிமுதல்
ராமேஸ்வரம்: இலங்கை கடற்கரையில் ஒதுங்கிய படகில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை அந்நாட்டு கடற்படையினர் பறிமுதல் செய்தனர். நேற்று முன்தினம் இரவு இலங்கை கல்பெட்டியா கடலோரத்தில் அந்நாட்டு கடற்படையினர் ரோந்து சென்றனர். அப்போது ஒரு படகில் இருந்த கடத்தல்காரர்கள் கடற்கரையில் குதித்து தப்பினர். பின் படகை சோதனையிட்ட இலங்கை வீரர்கள், அதனுள் 956 கிலோ பீடி இலை மூடைகள் இருந்தன. அதனை பறிமுதல் செய்து புத்தளம் சுங்கத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர். இந்த பீடி இலைகளின் மதிப்பு ரூ.10 லட்சம். இதனை ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதியில் இருந்து நாட்டுப்படகில் கடத்தி வந்து, இலங்கை கடத்தல்காரர்களிடம் ஒப்படைத்திருக்கலாம் என தெரிகிறது. இதனை கடத்திச் சென்ற கடத்தல்காரர்கள் யார் என ராமநாதபுரம் மாவட்ட உளவுத்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.