இன்று புரட்டாசி மகாளய அமாவாசை ராமேஸ்வரம் கோயிலில் பாதுகாப்பு
ராமேஸ்வரம்: இன்று புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடுவார்கள். இன்று தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் கோயிலுக்கு வருவார்கள். பக்தர்கள் முதலில் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டி திதி, தர்ப்பணம் செய்து அக்னி தீர்த்தத்தில் புனித நீராடுவார்கள். பின் கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடுவார்கள். இன்று பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் அக்னி தீர்த்த கடற்கரையில் கண்காணிப்பு கோபுரம், கோயிலுக்குள் தடுப்பு வேலிகள் அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் செல்லதுரை செய்துள்ளார். மேலும் அக்னி தீர்த்த கடற்கரை, பஸ் ஸ்டாண்டில் பக்தர்களுக்கு பாதுகாப்பு, போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்த ராமேஸ்வரம் ஏ.எஸ்.பி., மீரா தலைமையில் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.