சுயஉதவிக் குழுவில் ரூ.25 லட்சம் மோசடி
ராமநாதபுரம்; ராமநாதபுரம் எஸ்.பி., அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு முகாம் நடந்தது. இதில் பரமக்குடி அடுத்த ஆரம்பகோட்டை கிராமத்தை சேர்ந்த பெண்கள் சுய உதவிக்குழுவில் ரூ.25 லட்சம் கடன் பெற்று திரும்ப செலுத்தாமல் மோசடி செய்ததாக புகார் அளித்தனர். அவர்கள் கூறியதாவது: ஆரம்பகோட்டையில் அரசு அனுமதியின்றி பெண்கள் இணைந்து சுயஉதவிக் குழு நடத்தி வந்தோம். இதில் மாதந்தோறும் சிறு தொகை செலுத்தி சேமித்து அவசர தேவைக்கு கடன் பெற்று உள்ளோம். அதுபோல் ஆரம்பகோட்டையை சேர்ந்த சுகன்யா 2021 முதல் 2025ம் ஆண்டு வரை செலுத்தி வந்த பணத்தில் ரூ.25 லட்சம் கடன் பெற்று திருப்பி செலுத்தவில்லை. கடனை செலுத்தமாறு கூறினால் கொலை மிரட்டல் விடுகின்றனர். குழுவில் கடன் வாங்கிய பணத்தை திரும்ப பெற்று தருமாறு எஸ்.பி.,அலு வலகத்தில் புகார் அளித்து உள்ளோம் என்றனர்.