மத்திய அரசு ஒப்புதல் பெற்றபின் இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து
ராமேஸ்வரம்:மத்திய அரசு ஒப்புதலுக்கு பின் ராமேஸ்வரம்- இலங்கை தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்து துவக்கப்படும் என தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்தார். நேற்று ராமேஸ்வரத்தில் புதிய துறைமுக அலுவலகத்தை அமைச்சர் வேலு திறந்து வைத்து ராமேஸ்வரத்தில் பிரதமரின் ஆயுஷ்மான் திட்டத்தில் ரூ.20 கோடியில் மருத்துவமனை கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். அவர் கூறியதாவது : ராமேஸ்வரம், தனுஷ்கோடி, தங்கச்சிமடம் தண்ணீர் ஊற்று, பாம்பன், தேவிபட்டினத்திற்கு கடல்வழி படகு சுற்றுலா செல்ல ரூ.7 கோடியில் பாலம் அமைக்கும் பணி நடக்கிறது. மேலும் ரூ.118 கோடியில் ராமேஸ்வரம் முதல் இலங்கை தலைமன்னார் வரை மீண்டும் கப்பல் போக்குவரத்து துவக்க மத்திய அரசின் ஒப்புதலுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அனுமதி வழங்கியதும் கப்பல் போக்குவரத்து துவக்கப்படும். ராமேஸ்வரம் நகருக்குள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ரூ.150 கோடியில் புறவழிச் சாலை அமைக்கும் பணி துவக்கப்படும். இப்பணிகள் அடுத்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் என்றார்.