அரசு மருத்துவமனையில் டாக்டர் பற்றாக்குறை: மக்கள் அவதி
திருவாடானை; திருவாடானை அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர் இல்லாததால் பிரேத பரிசோனைக்காக வரும் உடல்கள் ராமநாதரத்திற்கு கொண்டு செல்லவேண்டிய உள்ளதால் மக்கள் சிரமப்படுகின்றனர்.திருவாடானையில் அரசு மருத்துவமனைக்கு தினமும் 300க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாகவும், 40 பேர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரு டாக்டர் மட்டும் பணியில் உள்ளார். அவரும் மதியத்திற்கு மேல் சென்று விடுவதால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் தவிக்கின்றனர். திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், தொண்டி, எஸ்.பி.பட்டினம், திருப்பாலைக்குடி போன்ற போலீஸ் ஸ்டேஷன்களுக்கு உட்பட்ட இடங்களில் நடக்கும் விபத்து, கொலை, தற்கொலையில் இறப்பவர்களின் உடல்கள் பிரேத பரிசோனை செய்ய இங்கு அனுப்படுகின்றன.மதியத்திற்கு மேல் கொண்டு வரப்படும் உடல்கள், டாக்டர் இல்லாததால் 60 கி.மீ. துாரமுள்ள ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லபடுகிறது. இது குறித்து மக்கள் கூறுகையில், திருவாடானை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோனை செய்ய டாக்டர் இல்லாததால் சிரமப்பட வேண்டியுள்ளது. உடனடியாக கூடுதல் டாக்டர்கள் நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.