இலங்கை கெடுபிடி : ராமேஸ்வரம் மீனவர்களுக்கு அடி மேல் அடி
ராமேஸ்வரம்:இலங்கை கடற்படையினரின் கெடுபிடியால் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீனவர்களுக்கு எதிர்பார்த்த இறால் மீன் கிடைக்காமல் அடிமேல் அடி விழுந்து வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.மீன்பிடி தடைக்காலம், சூறாவளி தடை முடிந்து 63 நாட்களுக்கு பிறக ஜூன் 17ல் ராமேஸ்வரம், மண்டபத்தில் இருந்து 1200 விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். ஆனால் முதல் நாளிலேயே இலங்கை கடற்படை வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டதால் இலங்கை பகுதியில் மீன்பிடிக்க முடியாமல் சராசரியாக ஒரு படகில் 100 கிலோ இறால் மீன்களுடன் மீனவர்கள் கரை திரும்பினர்.இந்நிலையில் 2ம் நாளாக ஜூன் 21ல் அதிக இறால் மீன்கள் கிடைக்கும் என ஆவலில் மீனவர்கள் சென்றனர். பாக்ஜலசந்தி கடலில் 5 கப்பலில் இலங்கை கடற்படை வீரர்கள் ரோந்து சுற்றி வந்ததால், பீதியடைந்த மீனவர்கள் இலங்கை எல்லை பகுதிக்குள் மீன்பிடிக்க முடியவில்லை. இதனால் இந்திய கடல் பகுதிக்குள் மீன் பிடித்து எதிர்பார்த்த இறால்கள் கிடைக்காமல் சராசரியாக ஒரு படகிற்கு 60 முதல் 100 கிலோ இறால் மட்டுமே சிக்கியதால் மீனவர்கள் ஏமாற்றத்துடன் நேற்று கரை திரும்பினர்.படகில் பழுது நீக்கம், புதிய வலைகள், பராமரிப்பு செலவுக்கு ரூ.3 லட்சம் வரை வாங்கிய கடனை செலுத்த முடியாதபடி எதிர்பார்த்த மீன்வரத்து இன்றி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் ஒரு படகிற்கு சராசரியாக 200 முதல் 300 கிலோ வரை இறால்கள் சிக்கியது என மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.