உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இலங்கை போலீஸ்காரர்  வழக்கு விசாரணை தள்ளிவைப்பு 

இலங்கை போலீஸ்காரர்  வழக்கு விசாரணை தள்ளிவைப்பு 

ராமநாதபுரம் : போதைப்பொருள் திருடி தலைமறைவாகி தப்பி வந்து தனுஷ்கோடியில் கைதான இலங்கை போலீஸ்காரர் மீதான வழக்கு ஜூன் 3க்கு தள்ளி வைக்கப்பட்டது.இலங்கை கொழும்பு புறநகர் பகுதியான சபுகஸ்கந்த பகுதியில் மரக்கடையில் இருந்து 2020 ஆக.,26-ல் இலங்கை போலீசார் 23 கிலோ ஹெராயின் போதைப்பொருளை கைப்பற்றினர். இது தொடர்பாக கைதான மரக்கடை உரிமையாளர் தகவலின்படி அனுரகுமார என்பவரை போலீசார் பிடித்தனர்.இவர் இலங்கை துறைமுகம் போலீஸ் ஸ்டேஷன் போலீஸ்காரர் பிரதீப் குமார் பண்டாராவின் 32, அண்ணன் ஆவார். பிரதீப் குமார் பண்டாரா தான் இலங்கை துறைமுக காவல் நிலையத்தில் போலீசார் கைப்பற்றி வைத்திருந்த போதைப்பொருளை பணி நேரத்தில் திருடி தனது சகோதரர் மூலம் கொடுத்திருக்கலாம் என இலங்கை போலீசார் சந்தேகித்தனர்.இதனால் பிரதீப் குமார் பண்டாராவை வழக்கில் சேர்த்து விசாரிக்க அந்நாட்டு போலீசார் முடிவு செய்தனர். இதையறிந்தவர் பைபர் படகில் தமிழகம் தப்பி வந்தார். 2020 செப்., 4ல் மண்டபம் கடலோர காவல் படை போலீசார் அவரை கைது செய்து சென்னை பூந்தமல்லி சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கு தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு விசாரணை நடக்கிறது. சிறையில் இருந்த பிரதீப் குமார் பண்டாரா ஜாமின் பெற்று திருச்சி முகாமிற்கு மாற்றப்பட்டார். இந்த வழக்கு ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி மெகபூப் அலிகான் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.அப்போது இலங்கை போலீஸ்காரர் நேரில் ஆஜரானார். பின் இந்த வழக்கை நீதிபதி மெகபூப் அலிகான் ஜூன் 3ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !