கள்ளப்படகில் ஊடுருவிய இலங்கை வாலிபர் கைது
ராமேஸ்வரம்: கள்ளத்தனமாக படகில் வேதாரண்யத்தில் ஊடுருவி ராமேஸ்வரத்தில் தங்கியிருந்த இலங்கை வாலிபரை போலீசார் கைது செய்தனர். இலங்கை யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்த நாகலிங்கம் மகன் கண்ணன் 32. இவரது மனைவி மற்றும் குழந்தைகள் இரு ஆண்டுகளுக்கு முன் அகதியாக ராமேஸ்வரம் வந்து மண்டபம் முகாமில் தங்கி உள்ளனர். இந்நிலையில் அவர்களை பார்க்க கண்ணன் நவ.,6ல் யாழ்ப்பாணத்தில் இருந்து கள்ளத்தனமாக படகில் புறப்பட்டு நாகை அருகே வேதாரண்யம் கடற்கரையில் வந்திறங்கினார். அங்கிருந்து பஸ்சில் மண்டபம் முகாம் வந்து மனைவியுடன் தங்கினார். இதையறிந்த கியூ பிரிவு போலீசார் கண்ணனை தேடிய நிலையில் அவர் ராமேஸ்வரத்தில் சுற்றி திரிந்த போது பிடித்து டவுன் போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின் இவர் பாஸ்போர்ட் வழக்கில் கைது செய்யப்பட்டு நேற்று சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.