மன்னார் வளைகுடா கடல் தீவுகளில் பாதுகாப்பை... பலப்படுத்துங்க ஆபீசர்ஸ்; பிளாஸ்டிக் பொருட்களால் அழியும் இயற்கை வளம்
கீழக்கரை,: ராமநாதபுரம் மாவட்டத்தில் நீண்ட நெடிய கடற்கரை பகுதியான மன்னார் வளைகுடா தீவுகளில் எவ்வித அனுமதியும் பெறாமல் பொழுது போக்கிற்காக செல்லக்கூடியவர்கள் தீவின் நிலப்பகுதிக்குள் மது பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் வீசி செல்கின்றனர். இதனால் தீவின் இயற்கை வளம் பாதிக்கப்படுகிறது. வனத்துறை, மரைன்போலீசார் கூடுதல் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். மண்டபம் வனச்சரகத்திற்கு உட்பட்ட தனுஷ்கோடி முதல் கீழக்கரை மற்றும் சாயல்குடி வனச்சரகத்திற்கு உட்பட்ட 21 தீவுகள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அமைந்துள்ளன. தீவுகளின் முக்கிய ஆதாரங்களாக பவளப்பாறைகள் பாதுகாப்பு அரணாக உள்ளன. கடற்கரையிலிருந்து 5 முதல் 12 நாட்டிக்கல் மைல் தொலைவிற்கு தீவுகள் முன்னுக்கு பின் வரிசையாக அமைந்துள்ளன. இந்நிலையில் எவ்வித அனுமதியும் பெறாமல் பொழுது போக்கிற்காக செல்லக்கூடியவர்கள் தீவின் நிலப்பகுதிக்குள் மது பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் வீசி செல்கின்றனர். இதனால் தீவின் இயற்கை வளம் பாதிக்கப்படுவதாகும் இயற்கை ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர். மேலும் அவர்கள் கூறியதாவது: தீவுப் பகுதிக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சட்ட விரோதமாக சிலர் பொழுது போக்கிற்காக தீவுகளை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கீழக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட அப்பா தீவு பகுதிக்கு அனுமதியின்றி சென்ற 6 இளைஞர்களை பிடித்து கீழக்கரை வனத்துறையினர் ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளனர். தற்போது நவீன ரக ரேடார் உள்ளிட்ட நுண்ணோக்கி கருவிகள் மூலம் தீவுக்குள் சட்ட விரோதமாக நுழைவோரை, கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்டுபிடித்து உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் அதிகளவு தீவு கடல் பகுதியை கடந்து இலங்கைக்கு சட்ட விரோதமாக பொருட்கள் கடத்தப்பட்டு வந்துள்ளது. எனவே மன்னார் வளைகுடா வனச்சரகத்தினர் நுண்ணறிவு போலீசார், மரைன் போலீசார், சுங்கத்துறை உள்ளிட்ட துறையினர் ஒருங்கிணைந்து கூட்டு ரோந்து செல்வதை வலுப்படுத்த வேண்டும் என்றனர்.