குறிப்பிட்ட நேரத்திற்கு பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் சிரமம்
முதுகுளத்துார: முதுகுளத்துாரில் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு முடிந்து திரும்ப செல்ல பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் சிரமப்பட்டனர்.முதுகுளத்துார், காக்கூர், தேரிருவேலி அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதியில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரிகளில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டு தேர்வு நடந்தது. இதில் முதுகுளத்துார், கடலாடி, சாயல்குடி, கமுதி அதனை சுற்றியுள்ள பகுதி மாணவர்கள் தேர்வு எழுதினர்.காலை தேர்வு மையத்திற்கு முன்கூட்டியே செல்வதற்காக மாணவர்கள் உரிய நேரத்திற்கு வந்தனர். தேர்வு முடிந்த பிறகு முதுகுளத்துார் சோனைமீனாள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தேர்வு மையத்தில் இருந்து முதுகுளத்துார் செல்வதற்கு பஸ் வசதி இல்லாததால் தேர்வு எழுதிய மாணவர்கள் வேறுவழியின்றி 3 கி.மீ., நடந்தே முதுகுளத்தூர் பஸ் ஸ்டாண்டிற்கு வந்தனர்.மதிய நேரம் என்பதால் வெயிலில் மாணவர்கள் சிரமப்பட்டனர். எனவே இனிவரும் காலங்களில் அரசு தேர்வுகள் நடைபெறும் போது தேர்வு மையத்திற்கு செல்வதற்கு வசதியாக சிறப்பு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.