தேசிய லங்காடி போட்டியில் தமிழகம் இரண்டாம் இடம்
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே நடந்த தேசிய அளவிலான லங்காடி போட்டியில் தமிழகம் அணி இரண்டாம் இடம் பெற்றது.முதுகுளத்துார் அருகே கவினா சி.பி.எஸ்.இ., இன்டர்நேஷனல் பள்ளியில் 14வது சீனியர், 13வது சப் ஜூனியர் லங்காடி விளையாட்டு போட்டி நடந்தது. இந்திய பாடி பில்டர் பாஸ்கரன் போட்டியை துவக்கி வைத்தார்.தமிழக லங்காடி விளையாட்டு தலைவர் பாலு, தாசில்தார் சம்பத், தலைமையாசிரியர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். இந்திய அணித் தலைவர் தேவசித்தம் வரவேற்றார். போட்டியில் தமிழகம், கேரளா, ஜம்மு காஷ்மீர், தெலுங்கானா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இருந்து 36 அணிகள் கலந்து கொண்டனர்.இதில் ஆண்கள், பெண்கள் என சீனியர், சப் ஜூனியர் என தனித்தனி பிரிவாக போட்டிகள் நடந்தது. முடிவில் சீனியர் ஆண்கள் பிரிவில் குஜராத் முதலிடம், தமிழகம் இரண்டாம் இடம், கோவா மூன்றாம் இடம்,பெண்கள் பிரிவில் கர்நாடகா முதலிடம், குஜராத் இரண்டாம் இடம், கோவா மூன்றாம் இடம் பெற்றது.சப் ஜூனியர் பிரிவில் ஆண்கள் பிரிவில் தெலுங்கானா முதலிடம், மகாராஷ்டிரா இரண்டாம் இடம், தமிழகம் மூன்றாம் இடம் பெற்றது. பெண்கள் பிரிவில் குஜராத் முதலிடம், மகாராஷ்டிரா இரண்டாம் இடம், கர்நாடகா மூன்றாம் இடம் பெற்றது.வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டது. உடன் இன்ஜினியர் கார்த்திக், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அன்பரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தமிழக அணி கேப்டன் சரண் நன்றி கூறினார்.