உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வயல்வெளியில் தீர்த்தங்கரர் சிலை கண்டெடுப்பு 7ம் நுாற்றாண்டை சேர்ந்தது

வயல்வெளியில் தீர்த்தங்கரர் சிலை கண்டெடுப்பு 7ம் நுாற்றாண்டை சேர்ந்தது

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே சூடியூர் கிராமம் வயல்வெளியில் 7ம் நுாற்றாண்டைச் சேர்ந்த மகாவீரர் தீர்த்தங்கரர் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. மதுரை தொல்லியல் ஆர்வலர் ஆனந்தன் மற்றும் குழுவினர் சூடியூர் கிராம மக்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டனர். இதன்படி பல ஆண்டுகளாக வயல்வெளியில் கருங்கல் சிலை இருப்பதை மக்கள் பார்த்துள்ளனர். இதனை ஆய்வு செய்த போது 4 அடி உயரம், இரண்டேகால் அடி அகலம் கொண்ட ஒரு சிலை எடுக்கப்பட்டது. இது7ம் நுாற்றாண்டைச் சேர்ந்த சமண தீர்த்தங்கரர் என உறுதி செய்யப்பட்டது. இது குறித்து ஆனந்தன் கூறியதாவது: இந்த மகாவீரர் தீர்த்தங்கரர் சிலை தியான நிலையில் அமர்ந்தபடி அர்த்த பரியங்க ஆசனத்தில் யோக முத்திரையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. தலையின் பின்புறம் முக்காலத்தையும் உணர்த்தும் ஒளி வீசும் பிரபாவளையமும், தலையின் மேல் புறத்தில் முக்குடையும், பின்புலத்தில் குங்கிலிய மரமும், பக்கவாட்டில் காவல் தெய்வம் சாமரம் வீசுவது போல் உள்ளது என்றார். இதுகுறித்து வருவாய் துறையிடம் தகவல் தெரிவித்து உரிய ஆய்வு செய்து சிலையை பாதுகாக்க அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ