உத்தரகோசமங்கை மங்களநாதர் கோவிலில் முதல் கால யாக சாலை பூஜை துவக்கம்
உத்தரகோசமங்கை:ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி - மங்களேஸ்வரி அம்மன் கோவிலில் நாளை மறுநாள் கும்பாபிஷேகம் நடக்கிறது. அதை முன்னிட்டு, நேற்று முன் தினம் காலை, 9:20 மணிக்கு யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது. மங்களநாதர் சுவாமி வலது சன்னிதி பிரகாரத்தில் அனுக்ஞை பூஜையுடன் வேத மந்திரங்கள் முழங்க பூஜைகள் துவங்கின.உற்சவ மூர்த்திகளாக விநாயகர், மங்களநாதர், மங்களேஸ்வரி அம்மன் வடிவமைக்கப்பட்டிருந்தனர். இதில், 200க்கும் மேற்பட்ட குருக்கள், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்கினர். பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் வேதாகம வித்யாலய முதல்வர் பிச்சை குருக்கள், துாத்துக்குடி ஆலால சுந்தர வேத சிவகாமி வித்யாலய முதல்வர் கல்யாண சுந்தர சிவாச்சாரியார், கோவை அரண் பணி அறக்கட்டளை தலைவர் தியாகராஜன், சமஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன், பொறுப்பாளர் பாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர்.சாந்தி ஹோமம், பிரசன்னாபிஷேகம் உள்ளிட்டவைகளும் பரிவார மூர்த்திகளின் கலசம் பிரதிஷ்டை நேற்று நடந்தது. சிறப்பு தீபாராதனை, பூர்ணாகுதி உள்ளிட்டவைகளுக்கு பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வெளி மாநில, மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் உத்தரகோசமங்கைக்கு வரத் துவங்கியுள்ளனர். உத்தரகோசமங்கை நகரம் மின் அலங்கார விளக்குகளால் விழாக்கோலம் பூண்டுள்ளது.