மேலும் செய்திகள்
கழிவுநீர் அகற்றும் லாரி காட்சி பொருளான அவலம்
25-Jun-2025
சாயல்குடி: சாயல்குடி பேரூராட்சிக்கு புதியதாக கழிவுநீர் அகற்றும் வாகனம் 2024 ஜூன் மாதம் வாங்கப்பட்டும் இதுவரை பதிவெண் கூட எழுதாமல் பயன்பாடின்றி காட்சிப்பொருளாக நிறுத்தப்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் கழிவுநீர் உறிஞ்சும் நவீன கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய டேங்கருடன் கூடிய மினி லாரி சென்னையில் இருந்து கடந்தாண்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கழிவுநீர் சேகரிக்க கூடிய புதிய டேங்கர் மினி லாரிக்கு இதுவரை ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் இருந்து ரிஜிஸ்ட்ரேஷன் (பதிவெண்) வழங்கப்படாததால் அவற்றை இயக்க வழியின்றி சாயல்குடி பேரூராட்சி வளாகத்தில் காட்சி பொருளாகவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.தன்னார்வலர்கள் கூறியதாவது: மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகளில் இதுபோன்று புதிய கழிவுநீர் வாகனம் வந்துள்ள நிலையில் அவற்றிற்கு முறையான பதிவெண்களை வழங்குவதற்கு வழியில்லாத நிலையில் உள்ளது. வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் மூலம் டேங்கர் மினி லாரிக்கு ரிஜிஸ்ட்ரேஷன் பெறுவதற்கு ரூ.20 ஆயிரம் வரை செலவாகும்.இதற்காக தனியாக நிதி ஒதுக்கப்படுவதில்லை. இதனால் தங்களது சொந்த பணத்தைப் போட்டு செலவழிக்க வேண்டி இருக்குமே என அலுவலர்கள் அஞ்சுகின்றனர். பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கழிவு நீர் எடுப்பதற்கான பணிகளில் தொய்வு ஏற்படுகிறது. அரசு வாகனத்திற்கு பதிவெண் வாங்காமல் நிறுத்தி வைத்துள்ள நிலை உள்ளதால் அரசு நிதி வீணடிக்கப்படுகிறது.எனவே சம்பந்தப்பட்ட ஆர்.டி.ஓ., அலுவலகத்தினர் சாயல்குடி பேரூராட்சியில் உள்ள புதிய கழிவுநீர் மினி லாரிக்கு பதிவெண் வழங்கவும் அதற்கான துரித நடவடிக்கை எடுத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வழிவகை செய்ய வேண்டும். இவ்விஷயத்தில் இரு துறை அலுவலர்களின் கூட்டு முயற்சி அத்தியாவசிய தேவையாக உள்ளது என்றனர்.
25-Jun-2025