நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து 5 மடங்கு உயர்வு ; சாலை வசதிகளை மேம்படுத்த கோரிக்கை
திருவாடானை : நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து கணக்கெடுப்பில் 5 மடங்கு உயர்ந்துள்ளதால் சாலை வசதிகளை மேம்படுத்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் மேம்பாட்டு பணிகளுக்காக வாகன போக்குவரத்து கணக்கெடுப்பு பணிகள் நடப்பது வழக்கம். அந்த வகையில் திருவாடானை தாலுகா உட்பட அனைத்து நெடுஞ்சாலைகளில் இந்த ஆண்டிற்கான கணக்கெடுப்பு பணிகள் கடந்த மே மாதம் நடந்தது. இப்பணிகளுக்காக 20 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அவர்கள் 24 மணி நேரம் பணியில் ஈடுபட்டார்கள். மங்களக்குடி, திருவெற்றியூர், குருந்தங்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தனித்தனி குழுவாக பிரிந்து நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையை கணக்கெடுப்பு செய்தனர். ஏழு நாட்கள் இப்பணி நடந்தது. 24 மணி நேர கணக்கெடுப்பில் 4500க்கும் மேற்பட்ட கார், வேன், ஜீப்பும், 400க்கும் மேற்பட்ட டிராக்டர் மற்றும் சரக்கு வாகனங்களும், 70க்கும் மேற்பட்ட பஸ் மற்றும் மினி பஸ்சும், ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட டூவீலர்களும், 500க்கும் மேற்பட்ட டூவீலர்களும், 150க்கும் மேற்பட்ட லாரிகளும், 15க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளும் சென்றது கணக்கெடுக்கப்பட்டுள்ளது.இந்த கணக்கெடுப்பு மூலம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சென்றதை விட தற்போது ஐந்து மடங்கு உயர்ந்துள்ளது. இதே போல் மாவட்டம் முழுவதும் உயர்ந்துள்ளது. இதன் மூலம் வாகன போக்குவரத்து எவ்வளவு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், சாலைகளில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தவும் வாகன ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. மக்கள் கூறுகையில், சாலைகளில் வாகன போக்குவரத்து நாளுக்கு நாள் பெருகி வருகிறது. ஆகவே விபத்துக்களை தவிர்க்க சாலை அகலப்படுத்துதல், புதிய சாலைகளை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். --