டிரான்ஸ்பாண்டர் கருவிகள் பயன்பாட்டில் இருக்க வேண்டும்: மீனவர்களுக்கு அறிவுரை
தொண்டி: மீனவர்களுக்கு வழங்கப்பட்ட டிரான்ஸ்பாண்டர் கருவி பயன்பாட்டில் இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.விசைப்படகுகளில் மீன்பிடி தொழிலின் போது தகவல்களை பரிமாறிக் கொள்ளும் வகையில் டிரான்ஸ்பாண்டர் கருவி பொருத்தப்பட்டது. இக் கருவியை பயன்படுத்துவது குறித்து மீனவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி சோலியக்குடி லாஞ்சியடியில் நடந்தது. மீன்வளத்துறை ஆய்வாளர் அபுதாகிர், உதவி ஆய்வாளர் அய்யனார், கடல் சார் அமலாக்கபிரிவு எஸ்.ஐ., குருநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.டிரான்ஸ்பாண்டர் கருவி மூலம் புயல், சூறாவளி போன்ற ஆபத்து ஏற்படும் போது மீன்வளத்துறை பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் படகு உரிமையாளர்கள் அவசர செய்தியை பெறவோ, பகிரவோ முடியும். ஆழ்கடலில் படகு நிலை கொண்டுள்ள இடத்தை துல்லியமாக கண்டறிந்து ஆபத்து காலங்களில் உடனுக்குடன் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.எனவே டிரான்ஸ்பாண்டர் கருவி எப்போதும் பயன்பாட்டில் இருக்க வேண்டும் என்று மீனவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.