பாம்பன் கடலில் கொந்தளிப்பு: படகு சேதம்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் ஏற்பட்ட கொந்தளிப்பால் நாட்டுப்படகு கரை ஒதுங்கி சேதமடைந்தது. கடந்த இரு நாட்களாக ராமேஸ்வரம், பாம்பன் பகுதியில் சூறாவளியுடன் கனமழை பெய்தது. இதில் பாம்பன் கடலில் ஏற்பட்ட கொந்தளிப்பால் ராட்சத அலைகள் எழுந்து கரையில் ஆக்ரோஷமாக மோதின. இதனால் பாம்பன் லைட் ஹவுஸ் கடற் கரையில் நிறுத்தி இருந்த மீனவரின் நாட்டுப்படகு நங்கூர கயிறு அறுந்து கரை ஒதுங்கி கவிழ்ந்தது. இதில் படகின் பக்கவாட்டு பலகைகள் சேதமடைந்தன. ஏராளமான மீனவர்கள் இணைந்து சில மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு நாட்டுப்படகை கரையில் ஏற்றினர்.