மீனவர் வலையில் சிக்கிய ஆமை உயிருடன் கடலில் விடப்பட்டது
திருவாடானை; தொண்டி கடலில் மீனவர்களின் வலையில் சிக்கிய ஆமை உயிருடன் மீட்கபட்டு கடலில் விடப்பட்டது.தொண்டி அருகே சோலியக்குடி லாஞ்சியடியை சேர்ந்த ராமகிருஷ்ணனுக்கு சொந்தமான நாட்டுப்படகில் மூன்று மீனவர்கள் நேற்று அதிகாலை மீன்பிடிக்கச் சென்றனர். நீண்ட துாரம் சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்த போது 50 கிலோ உள்ள அரிய வகை கடல் ஆமை சிக்கியது. இது குறித்து மரைன் போலீசாருக்கு தெரிவித்தனர். போலீசார் ஆமையை உயிருடன் கடலில் விட அறிவுறுத்தினர். அதனை தொடர்ந்து ஆமையை வலையிலிருந்து எடுத்து உயிருடன் கடலில்விட்டனர்.மீனவர்கள் கூறுகையில், தற்போது இனப்பெருக்க காலம் என்பதால்ஆமைகள் அடிக்கடி கடற்கரை பகுதிக்கு வருவது வழக்கமாக உள்ளது. வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தில் ஆமையை பிடிக்கக் கூடாது என்பதால் உயிருடன் மீட்டு கடலில் விட்டோம். தற்போது வலையில் சிக்கிய ஆமை சித்தாமை வகையை சேர்ந்தது.ஆமையால் வலை மிகவும் சேதமடைந்தது என்றனர்.