ராஜமரி கோயில் ரோடு சீரமைக்க வலியுறுத்தல்
தேவிபட்டினம்: பனைக்குளம் ராஜமரி கோயிலுக்கு செல்லும் ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.அழகன்குளம் விலக்கில் இருந்து பனைக்குளம் ராஜமரி கோயிலுக்கு செல்வதற்கு ரோடு வசதி உள்ளது. இந்த ரோட்டின் வழியாக பழனிவலசை, ஆற்றங்கரை, தேவிபட்டினம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதி மக்கள் பயனடைகின்றனர்.முக்கியத்துவம் வாய்ந்த ரோட்டில் 2 கி.மீ., ஜல்லிக்கற்கள் பெயர்ந்து ரோடு குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பக்தர்களும் கடுமையான சிரமத்தை சந்திக்கின்றனர்.பல ஆண்டுகளாக ரோட்டில் சீரமைக்க வலியுறுத்தி அப்பகுதியினர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்ற புகார் எழுந்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.