பெரிய கண்மாய் மதகில் நாணல் புற்களை அகற்ற வலியுறுத்தல்
ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகர், புறநகர் குடிநீர் ஆதாரமாக உள்ள பெரியகண்மாய் தென்கலுங்கு மதகின் ஷட்டர் பகுதியில் தண்ணீர் வெளியேற முடியாத அளவிற்கு முட்செடிகள், நாணல் புற்கள் அதிகளவில் வளர்ந்துள்ளதால் அவற்றை அகற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.ராமநாதபுரம் லாந்தை அருகே மதுரை ரோட்டில் உள்ள பெரிய கண்மாய் தென்கலுங்கு மதகின் ஷட்டர் அருகே கால்வாய்கள் பராமரிப்பின்றி முட்செடிகள், நாணல் புற்கள் வளர்ந்து புதர் மண்டியுள்ளது.ராமநாதபுரம் பெரிய கண்மாய் காருகுடியில் துவங்கி லாந்தை வரை 12 கி.மீ., நீளம், 8.24 சதுர மைல் நீர் பிடிப்பு பகுதியில் 618 மில்லியன் கன அடி தண்ணீரை தேக்க முடியும். இந்த கண்மாய் பாசன நீரில் 3500 ஏக்கர் நன்செய், புன்செய் சாகுபடி நடக்கிறது. தொருவளூர், பாப்பாகுடி, கவரங்குளம், களத்தாவூர், சூரன்கோட்டை, இடையர்வலசை, கே.கே.நகர், முதுனாள், நொச்சிவயல், சூடியூர், அச்சுந்தன்வயல், புத்தேந்தல், சாக்காங்குடி, வன்னிவயல், சித்துார், லாந்தை,ராமநாதபுரம் பகுதி விவசாயிகள் நெல் சாகுபடி செய்கின்றனர். மேலும் இந்த கண்மாய் நீர் ராமநாதபுரம் நகர மக்களின் குடிநீர் ஆதாரமாகும். எனவே தண்ணீர் செல்ல முடியாத அளவிற்கு ஷட்டர் பகுதியில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல முட்செடிகள், நாணல் புற்களை அகற்ற சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை (நீர்வளம்) அதிகாரிகள் நடவடிக்கைஎடுக்க வேண்டும். அதற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.