கீழமுந்தல் கடற்கரையில் பயனற்ற குடிநீர் தொட்டிகள் ஊராட்சி நிர்வாகம் அலட்சியம்
வாலிநோக்கம்: வாலிநோக்கம் ஊராட்சி கீழமுந்தல் மன்னார் வளைகுடா கடற்கரையில் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டிகள் ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் காட்சிப்பொருளாக உள்ளது.கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டி எவ்வித பயன்பாடின்றி காட்சிப் பொருளாக உள்ளது. கீழமுந்தல் மீனவர்கள் கூறியதாவது: வாலிநோக்கம் ஊராட்சி சார்பில் கடற்கரை ஓரத்தில் தொழிலுக்கு சென்று விட்டு கரை திரும்பும் மீனவர்களுக்கு தாகம் தீர்க்கும் வகையில் இரண்டு குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. மூன்று மாதங்கள் மட்டுமே செயல்பட்ட குடிநீர் தொட்டிகள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக காட்சிப் பொருளாக பயன்பாடின்றி உள்ளது.கடற்கரையில் இருள் சூழ்ந்து இருப்பதால் தொழிலுக்கு செல்ல வேண்டிய மீனவர்களின் நலன் கருதி கிராம மக்கள் சொந்த நிதியில் மின்விளக்குகள் அமைத்துள்ளனர். எனவே வாலிநோக்கம் ஊராட்சி நிர்வாகத்தினர் அரசு நிதி வீணாவதை தவிர்க்க குடிநீர் தொட்டிகளில் முறையாக குடிநீர் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.