கோடையில் பயணிகளை கவரும் வாலிநோக்கம் அழகும் ஆபத்தும் நிறைந்த கடற்கரை; சுற்றுலா துறையின் பார்வை தேவை
வாலிநோக்கம்: வாலிநோக்கம் மன்னார் வளைகுடா கடற்கரை சுற்றுலாப்பயணிகளை கவரும் எழில் மிகு பகுதியாக இருக்கும் நிலையில் அழகும் ஆபத்தும் நிறைந்தது. எனவே இதை மேம்படுத்த சுற்றுலாத்துறையினரின் பார்வை இங்கு தேவையாக உள்ளது.வாலிநோக்கம் கடற்கரையில் 3 கி.மீ., நீளத்திற்கு கடல் பாறைகள் நிறைந்து பாதுகாப்பு அரணாக காணப்படுகிறது. கடற்பாறையை ஒட்டியுள்ள பின் பகுதியில் நீண்ட நெடிய வெள்ளை மணல் பாங்கான பகுதியாக உள்ளது.சுற்றுலாப் பயணிகளை கவரும் விதத்தில் பாறைகளில் மீது பட்டு தெறிக்கும் பேரலைகள், மாசு இல்லாத வெள்ளை கடற்கரை மணற்பகுதி பல்வேறு அம்சங்களை கொண்டுள்ள கடற்கரை சுற்றுலா துறையின் பட்டியலில் உள்ளது.முன்பு பழைய சேதமடைந்த கப்பல் உடைக்கும் தொழில் நடக்கும் பகுதியாக இருந்தது. 2005க்கு பிறகு பணித்தள இயக்கம் முடிவுக்கு வந்தது.சுற்றுலா ஆர்வலர்கள் கூறியதாவது: வாலிநோக்கம் கடற்கரையில் உள்ள கடற்பாறை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பழமையான கோயில்களின் பிரகார துாண்களுக்கும், மண்டபங்கள், சிற்ப வேலைப்பாடுகள் அமைப்பதற்கு பயன்பட்டுள்ளது. சேதுபதி மன்னர்கள் காலத்தில் இங்கிருந்து அவற்றை உரிய முறையில் வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர்.வாலிநோக்கம் கடலில் உள்ள பல்வேறு இடங்களில் பாறைகள் வெட்டி எடுத்ததற்கான எச்சங்கள் மிச்சங்களாக இன்றும் உள்ளன. 30 டன் எடை கொண்ட ராட்சத பாறாங்கல் கடற்கரை ஓரத்தில் சிறிய கல்லின் பிடிமானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவற்றில் சிற்பத் துாண்கள் செய்ததற்கான மிச்சங்கள் உள்ளன. 2004ல் சுனாமி ஏற்பட்ட போது கடல் உள்வாங்கியது. அப்போது 200 மீ.,க்கு கடல் வற்றிய போது கடல் பாறையின் அடிப்பகுதியில் இரண்டு மாடி கட்டடங்கள் அளவிற்கு பெரும் பள்ளங்கள் மற்றும் ராட்சத குழிகள் தென்பட்டன. அழகும் ஆபத்தும் நிறைந்த வாலிநோக்கம் கடலில் பலத்த பேரலைகள் கண்களுக்கு விருந்தளிக்கின்றன.ஆழமில்லாத கரையோரப் பகுதிகளை தேர்வு செய்து கரைவலை மீன்பிடிப்பு பாரம்பரியமாக நடந்து வருகிறது. இங்கு பிடிபடும் சீலா மீன்கள் அதிக ருசி வாய்ந்தவை.அதே சமயத்தில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடற்பாறை நிறைந்த வாலிநோக்கம் கடலுக்குள் இறங்குவது மிகவும் ஆபத்தான செயலாகும். சுற்றுலாத் துறையினர் கோடைக்கால விடுமுறையில் வரக்கூடிய பொதுமக்களின் நலன் கருதி ஆபத்தான பகுதி என்ற விழிப்புணர்வு போர்டை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ராமநாதபுரம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து வரக்கூடிய பொதுமக்களின் வசதிக்காக தகவல் பலகை மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றனர்.