திருவரங்கையில் காட்சிப்பொருளாக மாறும் கால்நடை மருத்துவமனை
சிக்கல்: சிக்கல் அருகே மேலக்கிடாரம் ஊராட்சிக்கு உட்பட்ட திருவரங்கையில் கால்நடை மருத்துவமனை செயல்படாமல் பூட்டியே கிடக்கிறது.மேலக்கிடாரம் ஊராட்சிக்கு உட்பட்ட திருவரங்கை கிராமத்தில் அரசு கால்நடை மருத்துவமனை செயல்படுகிறது. மேலக்கிடாரம், கீழக்கிடாரம், மாரியூர், ஒப்பிலான், பெரியகுளம், கடுகுசந்தை, கீழச்செல்வனுார் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் வீடுகளில் ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவைகளை வளர்த்து வருகின்றனர்.இவற்றில் பெருவாரியான விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் கால்நடைகளுக்கு உடல் நலக் குறைபாடு ஏற்பட்டால் அவற்றை சிகிச்சை அளிப்பதற்கு திருவரங்கை சென்றால் பெரும்பாலும் பூட்டியே இருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர்.விவசாயிகள் கூறியதாவது: திருவரங்கையில் செயல்படும் கால்நடை மருத்துவமனையில் டாக்டர் பணியிடம் காலியாக உள்ளது. உதவியாளர் ஒருவர் மட்டுமே உள்ளார். அவரும் முகாம் என்று சொல்லி அடிக்கடி வெளியே சென்று விடுகிறார். வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே பெயரளவிற்கு இயங்குகிறது. இதனால் அவசர தேவைக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் பாதிப்பை சந்தித்து வருகிறோம். இதனால் கால்நடைகளுக்கு தனியார் டாக்டர்கள் மூலம் கூடுதல் கட்டணம் செலுத்தி மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் சார்பில் கால்நடை ஆம்புலன்ஸ் வசதி மற்றும் கால்நடை மருத்துவமனையை முறையாக திறப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.