பரமக்குடியில் நுாலகம் திறப்பது எப்போது: வீணாகும் பொருட்கள்
பரமக்குடி: பரமக்குடியில் கட்டி முடிக்கப்பட்ட நுாலகம் திறக்கப்படாத நிலையில் தளவாட பொருட்கள் வீணாகும் நிலை உள்ளது.பரமக்குடியில் மாவட்ட கிளை நுாலகம் 1954ல் துவக்கப்பட்டது. தொடர்ந்து வாடகை கட்டடத்தில் இயங்கி வந்த நுாலகம் சேதமடைந்ததால் 6 ஆண்டுகளுக்கு முன்பு பரமக்குடி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மாற்றப்பட்டது.அங்கு குறுகிய இடத்தில் செயல்பட்ட நிலையில் பல ஆயிரம் புத்தகங்கள் பயன்படுத்த முடியாமல் வீணாகியது. இந்நிலையில் 2022-ல் பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் நுாலகம் கட்ட முடிவாகி 2023 பணிகள் துவங்கி நடந்து முடிந்துள்ளது.கட்டி முடிக்கப்பட்டு 8 மாதங்கள் ஆகிறது. ஆனால் நுாலகம் திறக்கப்படாமல் உள்ளதுடன், நுாலகத்திற்கு வெளியில் தளவாட பொருட்கள் வந்திறங்கிய சூழலில் பாதுகாப்பற்ற நிலை உள்ளது.இதனால் போட்டி தேர்வு எழுதுவோர் மற்றும் மாணவர்கள், வாசகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நுாலகத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.