கூட்டுறவு சங்கங்களில் ஒழுங்குமுறை விதிகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்
திருவாடானை: சிறு, குறு விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் பயிர் கடன் ரூ. 2 லட்சமாக அறிவித்து 10 மாதங்களாகியும் வழங்கவில்லை என தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து கூட்டுறவு சங்கங்களில் ஒழுங்குமுறை விதிகள் தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடக்கிறது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் பெறும் விவசாயிகள் உரிய தவணை தேதிக்குள் கடனை திருப்பி செலுத்துவதன் மூலம் வட்டி இல்லாத பயிர் கடன் பெறலாம் என அரசு அறிவித்தது. சிறு, குறு விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் பிணை இன்றி வழங்கப்படும் பயிர் கடனுக்கான உச்ச வரம்பு ரூ.1.60 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்தது. கடந்த ஜன.,1 முதல் இத்திட்டம் அமலுக்கு வந்தது. திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் 33 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. விவசாயிகள் அருகில் உள்ள கூட்டுறவு சங்கங்களை அணுகி பட்டா, சிட்டா நகல், அடங்கல், கூட்டுறவு வங்கி கணக்கு எண், ஆதார் நகல், இரண்டு போட்டோக்களை கொடுத்து விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால் ரூ.2 லட்சம் வழங்காமல் ரூ.1.60 லட்சம் மட்டும் வழங்கப்பட்டது. இதுகுறித்து செய்தி தினமலர் நாளிதழில் வெளியானது. இதன் எதிரொலியாக ஒழுங்குமுறை விதிகள் தயார் செய்யம் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இது குறித்து கூட்டுறவு சங்க அலுவலர்கள் கூறியதாவது: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக துணைபதிவாளர் அலுவலகத்தில் இருந்து ஒழுங்குமுறை விதி தயாரிப்பு பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதால் விவசாயிகளிடமிருந்து அடையாளச் சான்று, முகவரி ஆதாரம், நில உரிமை பதிவுகள், பயிரிடப்பட்டுள்ள பயிர்களின் பதிவுகள், விவசாயி புகைப்படம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் தயார் செய்து வருகிறோம். பணிகள் முடிந்து, திருத்தம் செய்யப்பட்டு அனுமதி வழங்கியவுடன் ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றனர்.