| ADDED : பிப் 01, 2024 10:57 PM
திருப்புல்லாணி, --கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கும், கால்நடை வளர்ப்பில் ஈடுபடுவோருக்கும் உரிய முறையில் கோழி, வான்கோழி, புறா உள்ளிட்டவைகளுக்கான கூண்டுகள் வடிவமைத்து தருவதில் சின்னாண்டிவலசை, ரெகுநாதபுரம், தினைக்குளம், வண்ணாங்குண்டு உள்ளிட்ட கிராமங்களில் குடிசைத் தொழிலாக செய்து வருகின்றனர்.பாம்பு, கீரிப்பிள்ளை, காட்டுப்பூனை உள்ளிட்டவைகளிடம் இருந்து பாதுகாக்கும் விதமாக கோழிக் கூண்டுகள் பயனுள்ளதாக உள்ளன. கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்களது வீடுகளின் ஒரு பகுதியில் கோழி வளர்ப்பதற்காக சிமென்டாலான கூரைகளில் கூடுகள் அமைக்கின்றனர்.இருப்பினும் இது போன்ற மரத்தால் செய்யப்பட்ட கோழிக் கூண்டுகளுக்கு மவுசு நிலவுகிறது. சின்னாண்டி வலசையை சேர்ந்த கோழிக்கூண்டு விற்பனையாளர் பழனி கூறியதாவது:கட்டைகளால் ஆன சிறு சிறு மரத்துண்டுகளை ஒருங்கிணைத்து தரமான பாதுகாப்பான கோழி கூண்டுகளை வடிவமைத்து தருகிறோம். அதன் கூரையாக தகர சீட்டு போடப்படுகிறது. ஒரே நேரத்தில் 10 முதல் 15 கோழிகள் வரை அடைக்கலாம்.கூட்டின் வடிவமைப்பிற்கு தகுந்தாற் போல் ரூ.2800 முதல் ரூ.3500 வரை ஆர்டரின் பேரில் செய்து தருகிறோம். கோழி வளர்ப்பில் ஈடுபடுவோர் எங்களிடம் முன்கூட்டியே சொல்லி அதற்கு ஏற்ற அளவில் தயார் செய்து வாங்கி செல்கின்றனர். சுற்றுவட்டார கிராமங்களில் இதனை குடிசைத்தொழிலாக செய்து வருகிறோம் என்றார்.