கொல்லப்பட்ட வாலிபர் குடும்பத்திற்கு உதவிக்கரம்
நெமிலி:ராணிப்பேட்டை மாவட்டம், நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்தர்கள் சூர்யா என்கிற தமிழரசன், 24, விஜயகணபதி, 22. இவர்கள், ஜன., 16ம் தேதி திருமால்பூர் அரசு மேல் நிலைப்பள்ளி வளாகத்தில், நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தனர்.அப்போது, திருமால்பூர் காலனி கிராமத்தைச் சேர்ந்த பிரேம்குமார், 22, உள்ளிட்ட சிலர், தமிழரசன், விஜயகணபதி ஆகியோரை தாக்கி விட்டு, அவர்கள் மீது பொட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். தீக்காயமடைந்தோரை, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இதில், விஜயகணபதி, தமிழரசன் ஆகிய இருவரில், தமிழரசன் ஜன., 22ம் தேதி உயிரிழந்தார். இது தொடர்பாக, நெமிலி போலீசார் பிரேம்குமார், வெங்கடேசன் ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும், ஒருவரை தேடி வருகின்றனர். இதை தொடர்ந்து, பா.ம.க., மற்றும் யாதவ அமைப்பினர் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டனர். ராணிப்பேட்டை கலெக்டர் சந்திரகலா உத்தரவின்படி, தமிழரசனின் குடும்பத்திற்கு 3 சென்ட் நிலத்திற்குரிய பட்டா ஆணையை, கைத்தறி துறை அமைச்சர் காந்தி, தமிழரசனின் தாய் ஜானகியிடம் வழங்கினார்.