ரூ.25,000 லஞ்சம் பெற்ற பில் கலெக்டர் சிக்கினார்
ஆத்துார்:சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகராட்சி விநாயகபுரம், மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி, 70; அதே பகுதியை சேர்ந்த லட்சுமி பிரபாவிடம் வீடு வாங்கினார். தொடர்ந்து வெளிநாட்டில் உள்ள தன் மகன் கணபதி பெயருக்கு மாற்றம் செய்தார். நகராட்சியில் சொத்து பெயர் மாற்றம், சொத்து வரி, குடிநீர் வரிக்கு, கடந்த பிப்ரவரியில் மனு அளித்தார்.அதற்கு பில் கலெக்டர் குணசேகரன், 36, லஞ்சமாக 40,000 ரூபாய் கேட்டதாக கூறப்படுகிறது. பணம் தர விரும்பாத ராமசாமி சேலம் லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் அளித்தார். அவர்கள் ஆசோசனையின்படி நேற்று மதியம், ஆத்துார் நீதிமன்றம் எதிரே முன்பணமாக குணசேகரனிடம், 25,000 ரூபாயை ராமசாமி கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் குணசேகரனை கைது செய்தனர்.