ஊராட்சி ஆபீசை முற்றுகையிட்ட தொழிலாளர்களுக்கு ஆப்சென்ட்
பனமரத்துப்பட்டி:பணித்தள பொறுப்பாளர் மாற்றப்பட்டதால், ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட, வேலை உறுதி திட்ட தொழிலாளர்களுக்கு, 'ஆப்சென்ட்' போடப்பட்டது.பனமரத்துப்பட்டி, கெஜ்ஜல்நாயக்கன்பட்டி ஊராட்சியின் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள், நேற்று ஊராட்சி அலுவலகம் வந்தனர். ஆனால் வேலைக்கு செல்லாமல், அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.இதுகுறித்து வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் கூறுகையில், '5 ஆண்டுகளாக, பணித்தள பொறுப்பாளராக வேலை செய்த பெண்ணை திடீரென மாற்றிவிட்டனர். அவரை மீண்டும் பணித்தள பொறுப்பாளராக நியமிக்க வேண்டும்' என்றனர்.இந்நிலையில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு வருகை பதிவு வழங்கப்பட்டது. வேலைக்கு போகாமல் ஊராட்சி அலுவலகம் வந்தவர்களுக்கு, 'ஆப்சென்ட்' போடப்பட்டது. மதியத்துக்கு பின், தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.இதுகுறித்து ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது:கடந்த 9ல், கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் பணி தளத்துக்கு சென்றபோது தொழிலாளர்கள் வேலை செய்யாமல் துாங்கிக்கொண்டிருந்தனர். மண்வெட்டி உள்ளிட்ட உபகரணங்கள் இல்லை. வருகை பதிவேட்டை ஆய்வு செய்தபோது, 4 தொழிலாளர்களும் இல்லை. வேலைக்கு வராமல் வந்தது போல் பதிவு செய்துள்ளனர். இதனால் பணித்தள பொறுப்பாளர் மாற்றப்பட்டார். அந்த பொறுப்பு, திட்ட ஒருங்கிணைப்பாளரிடம்(மக்கள் நலப்பணியாளர்) ஒப்படைக்கப்பட்டது.இவ்வாறு அவர்கள் கூறினர்.