பிரசன்ன வரதராஜர் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம்
சேலம்: சேலம், பட்டைக்கோவில் பிரசன்ன வரதராஜ பெருமாள் கோவிலில், ஆண்டாள் திருப்பாவை நண்பர்கள் குழு சார்பில், ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது. இதே போல் புரட்டாசி மாதத்தில், ஆண்டாள் நாச்சியார் திருக்கல்யாண உற்சவம் இக்குழுவினரால் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டுக்கான கல்யாண உற்சவம் நேற்று நடந்தது.இதனையொட்டி காலை, 10:00 மணிக்கு வரதராஜர் மற்றும் ஆண்டாள் நாச்சியாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தி சர்வ அலங்காரம் செய்து ஊஞ்சலில் எழுந்தருள செய்தனர். பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, வரதராஜர் கையில் காப்பு கட்டி, பூணுால் அணிவித்து திருமண சடங்குகளை யாக பூஜை செய்து திருமாங்கல்யத்தை பெருமாள் கரத்தில் வைத்து பூஜித்து ஆண்டாள் நாச்சியார் கழுத்தில் அணிவித்து கல்யாணத்தை நடத்தி வைத்தனர்.தொடர்ந்து மாலை மாற்றும் வைபவம் நடத்தினர். ஆண்டாள் திருக்கல்யாணத்தை காண ஏராளமான பக்தர்கள் கோவிலில் திரண்டிருந்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஆண்டாள் திருப்பாவை நண்பர்கள் குழுவினர், பட்டாச்சாரியார்கள் செய்திருந்தனர்.