அர்ப்பணிப்போடு பணி செய்தால் முடியாதது எதுவும் இல்லை; எம்.பி.,
அர்ப்பணிப்போடு பணி செய்தால் முடியாதது எதுவும் இல்லை; எம்.பி.,தாரமங்கலம், நவ. 12-சங்ககிரி தொகுதிக்குட்பட்ட தாரமங்கலம் நகரம், மேற்கு ஒன்றிய தி.மு.க., ஓட்டுச்சாவடி பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. நகர செயலர் குணசேகரன், ஒன்றிய செயலர் பாலகிருஷ்ணன் வரவேற்று பேசினர். மேற்கு மாவட்ட செயலரும், சேலம் எம்.பி.,யுமான செல்வகணபதி பேசியதாவது: முதல்வர் ஸ்டாலின் செய்த திட்டங்களால் லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளையும் வென்றோம். இதில், 234 சட்டசபை தொகுதிபடி பார்த்தால், 221 தொகுதிகளில் தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது. தோற்ற கணக்கில் மீதமுள்ள, 13 தொகுதிகளில் சங்ககிரியும் ஒன்று. வரும் சட்டசபை தேர்தலில் முதல்வர் கொண்டு வந்த மகளிர் உரிமை தொகை, கட்டணமில்லா பஸ் பயணம், காலை உணவு திட்டத்தை மக்களிடம் எடுத்து கூறி, திண்ணை பிரசாரத்தில் ஈடுபட வேண்டும். வரும், 16, 17, 23, 24 ஆகிய தேதிகளில் வாக்காளர் பெயர் சேர்ப்பு, நீக்கல் முகாம் நடக்க உள்ளது. அதில் ஒவ்வொருவரும், 18 வயது பூர்த்தியான பத்து இளைஞர்களை வாக்காளர் பட்டியலில் இணைத்து, தொடர்ந்து முதல்வரின் திட்டங்களை அவர்களிடம் கூற வேண்டும். அனைவரையும் கட்சியினர் ஒருங்கிணைத்து, அர்ப்பணிப்போடு பணி செய்தால் நம்மால் முடியாதது எதுவும் இல்லை. அனைவரும் வேறுபாடு இன்றி பணியாற்றி, 2026 சட்டசபை தேர்தலில் சங்ககிரி தொகுதி தி.மு.க., வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு பேசினார். சங்ககிரி தொகுதி பொறுப்பாளர் செந்தில்குமார், மாவட்ட அவைத்தலைவர் தங்கமுத்து, மாவட்ட துணை செயலர்கள் சம்பத்குமார், சுந்தரம், எலிசபத்ராணி, பொருளாளர் பொன்னுசாமி மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள், இடைப்பாடி, இடங்கணசாலை நகராட்சி தலைவர்கள், தாரமங்கலம் நகராட்சி துணைத்தலைவர் தனம், கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.