100 பயனாளிகளுக்கு காதொலி கருவி வழங்கல்
சேலம், சேலம் அரசு மருத்துவமனையில், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில், காதொலி கருவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி, 8,000 ரூபாய் மதிப்பில், காதொலி கருவியை, 100 பயனாளிகளுக்கு வழங்கினார்.தொடர்ந்து, கலெக்டர் கூறியதாவது: அரசு மருத்துவமனையில் காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை துறையில் கேபியல் பிரிவில் நவீன கருவிகளால், பச்சிளங்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செவித்திறன் பரிசோதனை செய்யப்படுகிறது.குறைபாடு உள்ளவர்களுக்கு, காப்பீடு திட்டத்தில் இலவசமாக கருவிகள் வழங்கப்படுகின்றன. இத்திட்டம் மூலம் கடந்த, 3 ஆண்டுகளில், 3,000 பேர் பயனடைந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.தொடர்ந்து சேலம் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் பயன்பாட்டுக்கு, 2,495 மெத்தை விரிப்புகளை, கலெக்டர், செவிலியர்களிடம் வழங்கினார். சேலம் அரசு மருத்துவமனை டீன் தேவி மீனாள், கண்காணிப்பாளர் ராஜ்குமார், காது மூக்கு தொண்டை துறைத்தலைவர் கிருஷ்ணசுந்தரி உள்ளிட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர்.