இரவு காவலர் இல்லாத மருத்துவமனை போதை நபர்களால் ஊழியர்கள் அச்சம்
இளையான்குடி: இளையான்குடி அரசு மருத்துவமனைக்கு தினமும் 500க்கு மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். 25க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.மருத்துவமனையில் இரவு காவலர் பணியிடம் காலியாக உள்ளது. போலீசாரும் ரோந்து செல்லாததால் இரவில் போதையில் வரும் சிலர் பெண் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், ஊழியர்கள்,நோயாளிகளிடம் தகராறு செய்கின்றனர்.நேற்று முன்தினம் இரவு குடிமகன் ஒருவர் மருத்துவமனைக்குள் புகுந்து அட்டகாசம் செய்ததை தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகத்தினர் இளையான்குடி போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.மார்க். கம்யூ., தாலுகா செயலாளர் ராஜூ கூறியதாவது: இளையான்குடி அரசு மருத்துவமனையில் இரவு நேர காவலர் பணியிடம் காலியாக இருப்பதால் போதிய பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு போதிய மருத்துவர்கள் மற்றும் இரவு நேர காவலர் பணியிடங்களை நிரப்ப கோரி கையெழுத்து இயக்கம் நடத்தி மருத்துவத்துறை இணை இயக்குனரிடம் வழங்கியுள்ளோம்.இந்நிலையில் நேற்று முன்தினம் குடிமகன் ஒருவர் மருத்துவமனைக்குள் புகுந்து தகராறு செய்துள்ளார். மாவட்ட நிர்வாகம் இளையான்குடி அரசு மருத்துவமனைக்கு இரவு நேர காவலர் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.