கீழடி அருங்காட்சியகத்தில் பஞ்சாப் கூடுதல் தலைமை செயலர்
கீழடி: கீழடி அருங்காட்சியகத்திற்கு பஞ்சாப் மாநில கூடுதல் தலைமை செயலாளர் பாலமுருகன் நேற்று வருகை தந்தார். கீழடியில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் கட்டப்பட்டு கடந்த 2023 மார்ச் 5ம் தேதி திறக்கப்பட்டது.ஆறு கட்டட தொகுதிகளில் 13 ஆயிரத்து 384 பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இங்கு 2,600 ஆண்டுகளுக்கு முன் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்களை காண தினசரி பல்வேறு நாடுகள், மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். நேற்று மதியம் பஞ்சாப் மாநில கூடுதல் தலைமை செயலாளர் பாலமுருகன், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் கமிஷன் உறுப்பினர் கண்ணதாசன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். சிவகங்கை கோட்டாட்சியர் விஜயகுமார், தாசில்தார் விஜயகுமார், வி.ஏ.ஓ., பிரபு பங்கேற்றனர். கீழடி அகழாய்வு தள இணை இயக்குனர் அஜய்குமார் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்கள், அவற்றை கண்டறிந்த விதம் குறித்து விளக்கமளித்தார். பின் திறந்த வெளி அருங்காட்சியகத்தையும் அவர்கள் பார்வையிட்டு சென்றனர்.