இடநெருக்கடியில் மதகுபட்டி சந்தை ரோட்டோர கடைகளால் விபத்து அபாயம்
சிவகங்கை: சிவகங்கை அருகே மதகுபட்டியில் இடநெருக்கடியில் வாரச்சந்தை நடப்பதால், பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், மதகுபட்டி ஊராட்சியில் வியாழன் தோறும் வாரச்சந்தை நடைபெறும். இந்த ஊராட்சிக்கு சொந்தமான இடமின்றி பொதுமக்கள் நடமாடும் இடத்தில் ரோட்டில் கடைகள் விரித்து சந்தை நடைபெறுகிறது. இங்கு 300க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடை வைத்து, காய்கறி விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றை வாங்குவதற்காக மதகுபட்டி, சொக்கலிங்கபுரம், பாகனேரி, கட்டாணிபட்டி, உசிலம்பட்டி உட்பட கிராம மக்கள் வந்து செல்கின்றனர். இடநெருக்கடியான இடத்தில் வாரச்சந்தை நடப்பதால், காய்கறி வாங்க செல்லும் மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். சந்தைக்குள் வாகனங்கள் சென்று வருவதற்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், பொதுமக்கள் வாரச்சந்தையன்று பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே ஊராட்சி நிர்வாகம் போக்குவரத்து நெரிசல் இல்லாத இடத்தில் வாரச்சந்தை நடத்துவதற்கான இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். வாரச்சந்தைக்கு இடம் தேர்வு
மதகுபட்டி ஊராட்சி தலைவர் எம்.சரஸ்வதி கூறியதாவது: வாரச்சந்தையில் கடைகளுக்கு வரி வசூல் செய்ய ரூ.1.5 லட்சத்திற்கு டெண்டர் விட்டுள்ளோம். தற்போது பொதுமக்கள் நடமாடும் இடத்தில் தான் நடக்கிறது. சந்தைக்கென தனியாக தச்சம்புதுப்பட்டி ரோட்டில் இடம் பார்த்துள்ளோம். விரைவில் அங்கு சந்தை அமைக்கப்படும் என்றார்.